நட்புதிர் காலம் !
உயிருக்குயிராய் இருந்தவர்கள்
இன்றெங்கோ இருக்கிறார்கள்
புதிய புதிய உயிர் நட்புக்களுடன்
என்னுயிர் நட்பு
பால்யகால நட்பானதோ?
இலையுதிர் காலமுண்டு
நட்புதிர் காலமுண்டா?
பள்ளித்தோழன்
எங்கோ பார்த்த
ஞாபகமானான்!
கல்லூரித்தோழன்
இன்னும்
ஞாபகத்தில்
மட்டுமிருக்கிறான்!
உடன்பணியாற்றிய
நண்பனோ
பெயர்தெரியா
தூரதேசத்தில்!
நெடுநாள் கடந்து
திரும்பிப்பார்க்கிறேன்
காலமென்னும் கரையான்
நட்பென்னும் பசுமரத்தை
கொஞ்சம் கொஞ்சமாய்
அரித்துத்த்தான் போயிருக்கிறது....
பேசுவதற்கென்றே பிறந்தவர்கள்
இப்போது பேசாமலே
இருக்கின்றனர்...
வாழ்கின்றனர்....
செல்லரித்த தேகமாய்
நட்பிருக்கிறது ஆனால்
பழைய நெருக்கம்தான்
ஏனோ மனதில்
வர மறுக்கிறது!
காதல் தோல்வியடைந்த
கன்னியொருத்தி
மாற்றானை மணந்த
கதையாய்
அமைதியென்னும்
நஞ்சுகோப்பை
தயக்கத்தைப்
புகட்டுகிறது!
யாருமற்ற
நொடிப்பொழுதில்
காவியமாம்
நட்புக்காலம்
மின்னலென
வெட்டி மறைகிறது!
சொத்துசுகம்
சேர்க்காதவன்
வெறுமையாய்
உணரும்போது
ஓடிவந்து
ஒட்டுவது
நட்புத்தானே?
நடிப்பிழந்த
நடிகனுண்டு
நட்பிழந்த
நண்பனுண்டா?
வரலாறாய்
வாழ்ந்தகாலம்
வறண்டுபோன
நிதர்சனத்தால்
விட்டுவிட்ட
நட்பூ'க்களை
எதையிட்டு
நிரப்புவது?

Comments
Post a Comment