நீர்மம் !
தண்ணீரைப் பாருங்கள் அது எப்போதும் தண்ணீராகவே இருக்கிறது.... கடல் காய்ந்து முகிலாகி முகில் உதிர்ந்து மழையாகிப் பொழிந்தாலும்... வெள்ளமெனப் பெருக்கெடுத்து நதியெனவே மௌனமாகி நடந்தாலும்... குளம் குட்டை ஏரியெனத் தேங்கினாலும் . குழம்பு கூட்டாகி கும்பிக்கு சோறென்று ஆனாலும்.. உமிழ்நீராய் வியர்வையாய் சிறுநீராய் ஆனாலும்.. சூதகமாய் ஆனாலும் சூல்கொண்டு கருவாய் உதித்தாலும்... ரத்தமும் சதையுமாகி பேறுகாலப் பனிக்குடமாய் உடைந்தாலும்... ஈரமாய் என்றும் நல்லோர் மனதில் கசிந்தாலும்.... கருணைக் கண்களில் கண்ணீராய் உதிர்ந்தாலும்.... சாக்கடையாய் வடிந்தாலும் சாக்காடே சென்றாலும்.... தீர்த்தக்கரையினில் ஓர்நாள் சாம்பலாய்க் கரைந்தாலும்... தண்ணீரைப் பாருங்கள் அது எப்போதும் தண்ணீரையே சேர்க்கிறது..... தண்ணீரைப் பாருங்கள் அது எப்போதும் தண்ணீராகவே இருக்கிறது.....